புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மூளைக்காய்ச்சல் நோய் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த ஜோசப் என்ற முதியவர் ஜேஇ எனப்படும் அரிய வகை மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நோயுற்ற விலங்குகளை கடிக்கும் கொசுக்கள், மனிதனை கடிக்கும்போது இந்த காய்ச்சல் பரவும்.
முத்தியால்பேட்டையில் இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டதை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரிமணிகண்டன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை, நகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார். இதையடுத்து, முத்தியால்பேட்டையில் பாரதிதாசன் வீதி, ரொசாரியா வீதி, தனக்கோடி அம்மன் பேட்டை ஆகிய பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் கொசு மருந்து தெளிக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர். மேலும், மூளை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட முதியவரின் வீடுகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா என பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
இந்தப் பணியை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ. முன்னிலையில் முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் புவனேஸ்வரி, மஞ்சு, நகராட்சி மருத்துவர் கதிரவன்,
சுகாதார ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் கால்நடை வளர்ப்போரை அணுகி கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் உள்ளதா என கால்நடைத் துறை மருத்துவர் முரளிதரன் பரிசோதனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, கொசுக்களை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.