பிரான்ஸ் குடியுரிமை பெற்றவரை இரும்புக் கம்பியால் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர் மனோகர் (58). இவர், ரெட்டியார்பாளையம் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த வெற்றிவேல் (24), அவரது உறவினர் சிலம்பரசன் (17) ஆகியோருடன் வில்லியனூர் மாதா தேவாலயத்துக்கு சனிக்கிழமை பாதயாத்திரை மேற்கொண்டார். அதன் பின்னர், அவர்கள் மூவரும் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் பூக்கடையில் நின்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியில், பூ வியாபாரி சண்முகம் (49), பூக்களின் மீது தண்ணீர் தெளிப்பதைப் போல, கடையோரம் நின்றிருந்தவர்கள் மீது தண்ணீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து சண்முகம், கல்லூரி மாணவரான அவரது மகன் முகிலன் (20) இருவரும் சேர்ந்து மனோகர், வெற்றிவேல், சிலம்பரன் ஆகியோரை இரும்புக் கம்பியால் தாக்கினார்களாம்.
இதில் பலத்த காயமடைந்த மனோகர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தந்தை, மகன் ஆகிய இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.