சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் மூலம் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த மகளிர் நெட் பால் போட்டி புதுச்சேரிஉப்பளம் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் முதன் முறையாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (செப்.1, 2) நடைபெறுகிறது.
இது குறித்து சிறப்பு ஒலிம்பிக்ஸ் ஆசிய பசிபிக் பிராந்திய தேசிய விளையாட்டு இயக்குநர் விக்டர் ஆர். வாஸ், புதுச்சேரி சிறப்பு ஒலிம்பிக்ஸ் பாரத் தலைவர் ரகோத்தமன், பகுதி இயக்குநர் சித்ராஷா ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஏ, பி என இரு
அணிகளும், இலங்கையைச் சேர்ந்த ஒரு அணியும் என 3 அணிகள் விளையாடுகின்றன.
இந்த சிறப்பு ஒலிம்பிக்ஸில் இந்திய அணி சார்பில் மகாராஷ்டிரம், தில்லி, சண்டிகர், பஞ்சாப், புதுவை உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த நெட்பால் தொடரானது ராபின்லீக் இரட்டை சுற்று முறையில் முத்தரப்புத் தொடராக நடைபெறுகிறது.
இதில் 14 முதல் 18 வயதுடைய வீராங்கணைகள் பங்கேற்கின்றனர். ஒரு அணிக்கு 9 வீராங்கனைகள் விளையாடுகின்றனர். இதில் 5 சிறப்பு குழந்தை வீராங்கனைகளும், 4 இயல்பான பெண் வீராங்கனைகளும் விளையாடுகின்றனர். மொத்தம் 6 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளின் தொடக்க விழா சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. இதில் புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், இந்திய வாலிபால் விளையாட்டு வீராங்கனை நர்மதா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர் என்றனர்.