சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் செப்.13-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, புதுவையில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு குறித்த ஆலோசனைக் கூட்டம் காவல் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், டிஐஜி சந்திரன், முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள் அபூர்வா குப்தா, மகேஷ்குமார் பர்னவால், காவல் கண்காணிப்பாளர்கள், போக்குவரத்து, தீயணைப்புத் துறை, வனத் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவண்ணம், எந்தவித அசம்பாவிதமும் நேரிடாதவாறு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற வேண்டும் என்றும், அன்றைய தினம் பாதுகாப்பு, மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்தும் ஆலோசிக்கப்
பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நாள்களில் எத்தனை காவலர்களை பாதுகாப்புப் பணியில் அமர்த்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அறிவுரைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரியில் 126 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாசு இல்லாத வகையில் சிலையை உருவாக்குவது குறித்தும் விளக்கப்பட்டது.