விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகள், சனிக்கிழமை (செப்.15) ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, காரைக்காலில் இந்து முன்னணி சார்பில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். ஸ்ரீசக்தி விநாயகர் மத்தியக் கமிட்டி சார்பில் இந்த சிலைகள் ஆங்காங்கே வியாழக்கிழமை 52 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. பிரதான விநாயகராக விளங்கக்கூடிய ஸ்ரீசக்தி விநாயகர், காரைக்கால் கோயில்பத்து பகுதி ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயில் வாயில் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
பிரதிஷ்டை செய்யப்பட்ட 3}ஆவது நாள் கடலில் கரைக்கப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை பகல் 11 மணியளவில் ஸ்ரீ ஏழை மாரியம்மன் கோயில் பகுதிக்கு அனைத்து விநாயகர் சிலைகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில், ஒன்றன்பின் ஒன்றாக, சிறப்பு மேள வாத்தியங்கள், இசை முழக்கங்களுடன் பாரதியார் சாலை உள்ளிட்ட காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ள சாலை வழியே கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மாலை 6 மணிக்குள் ஊர்வலம் முடிக்கப்பட்டு, கடலில் கரைக்கப்படவேண்டும் என
காவல்துறை ஏற்கெனவே அறிவிப்பு செய்துள்ளது.
அதன்படி, சக்தி விநாயகர் கமிட்டியினர் ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒவ்வொரு விநாயகர் சிலைக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கவேண்டும் என காவல்துறை ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைத்து, காவல்துறையினர் பல்வேறு அறிவுறுத்தல்களை செய்தனர். சிலைகள் ஒவ்வொன்றும் ஒன்றன்பின் ஒன்றாக கொண்டு செல்லவேண்டும். இசைக் குழுவினர் ஒரு தூரத்திலும், விநாயகர் ஒரு தூரத்திலும் இருக்கக் கூடாது. அனைவரும் ஒருங்கிணைந்து செல்லவேண்டும். போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில், எந்த பகுதியிலும் நிறுத்தாமல் ஊர்வலம் நடக்க வேண்டும். மிகுந்த கட்டுப்பாட்டுடன் பிரச்னைகளுக்கு வழிவகுக்காமல், அமைதியாகவும், ஆன்மிக நெறியுடனும் ஊர்வலம் நடத்தவேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டது
குறிப்பிடத்தக்கது.