நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு ஆளுநர் பாராட்டு
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கோவையைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியை ஸதியை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை அழைத்துப் பாராட்டினார்.
கோவை மாவட்டம், மலுமாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை ஆர்.ஸதி. இவருக்கு 2017-18 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயிடு அண்மையில் வழங்கினார்.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற பள்ளித் ஆசிரியை ஸதியை புதுவை ஆளுநர் மாளிகைக்கு ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை அழைத்துப் பாராட்டினார். நிகழ்ச்சியில் கிரண் பேடி கூறியதாவது:
தலைமை ஆசிரியை ஸதி, 50 ஆண்டுகள் பழைமையான பள்ளியின் கட்டடத்தை தனியார் நிறுவனத்தின் மூலம் ரூ. 25 லட்சம் நிதியுதவி பெற்று சீரமைத்துள்ளார். பள்ளியில் உள்ள அனைத்து கரும்பலகைகளையும் பசுமை பலகைகளாக மாற்றியுள்ளார்.
கணினிகள், டேப்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறார். பொலிவுறு வகுப்பறைகளை தனியார் நிறுவன உதவியுடன் உருவாக்கியுள்ளார்.
மேலும், ரூ. 75 லட்சத்தில் புதிய பள்ளிக் கட்டடத்தைக் கட்டியுள்ளார். அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது பெருமைக்குரியது.
புதுவை அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் ஸதி பணியாற்றும் பள்ளிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு வர வேண்டும். இதுபோன்ற முயற்சிகளை புதுவையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஸதி, தனது பள்ளி தொடர்பான விவரங்களை ஒளிக் காட்சியுடன் ஆளுநர் கிரண் பேடி, புதுவை தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் அதிகாரிகளுக்கு விளக்கினார். பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.