பதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கட்டைகள் பறிமுதல்
புதுச்சேரியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகளை வனத் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துரை புலிகள் சரணாலயப் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டிப் பதுக்கிய கும்பலை வனத் துறையினர் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புதுச்சேரி, லாசுப்பேட்டைக்கு சில நாள்களுக்கு முன்பு வந்த தமிழக வனத் துறையினர் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கட்கைளைப் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே, புதுச்சேரியில் மேலும் பல இடங்களில் திருட்டு மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி அன்னை நகர் பகுதியில் உள்ள ஒரு காலிமனையில் கடத்தல் தேக்கு மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி வனத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வனத் துறை இயக்குநர் குமார் உத்தரவின் பேரில், வனத் துறை அதிகாரி செல்வநாதன் மற்றும் வனத் துறையினர், காலாப்பட்டு போலீஸார் உதவியுடன் சனிக்கிழமை திடீரென அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு மரக்காணம் உள்ளிட்ட தமிழக பகுதிகளில் இருந்து 43 தேக்கு மரங்களை வெட்டி அவற்றை புதுச்சேரிக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, லாரி, டிராக்டரை வரவழைத்து பல லட்சம் மதிப்பிலான தேக்கு மரக்கட்டைகளை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் மீது வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.