புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாமில் விரைவில் டோக்கன் முறை அமல்படுத்தப்படும் என்று புதுவை சுற்றுலாக் கழகத் தலைவர் எம்.என்.ஆர்.பாலன் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது: சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மட்டுமே அரசுக் கழகங்களில் ஊழியர்களுக்கு பிரதி மாதம் 30-ஆம் தேதியே ஊதியம் தரும் நிலையில் உள்ளது. நான் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர், இவ்வாறு பின்பற்றப்படுகிறது. தலைவர் பதவியைவிட்டுச் சென்றபோது அவ்வாறு இல்லை. மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்ற கடந்த 3 மாதங்களாக 30-ஆம் தேதியே ஊதியம் வழங்கி வருகின்றோம்.
கடற்கரைச் சாலையில் உள்ள லே கபேயில் காபி ரூ. 60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து முதல்வர் நாராயணசாமியின் அறிவுறுத்தலின் பேரில், தற்போது ரூ. 20-க்கு காபி விற்பனை செய்யப்படுகிறது.
முன்னர், சுற்றுலாக் கழகத்தில் வசூல் செய்யப்படும் பணம் 2, 3 தினங்கள் வரை கணக்குக் காண்பிக்கப்படாமல் இருக்கும். தற்போது அன்றைய தினமே கணக்குக் காட்ட வழி ஏற்படுத்தப்பட்டது. மேலும், இதை இணையதளத்திலும் அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டது.
ஊழியர்களைப் போராட்டத்துக்கு தூண்டுபவர்களைப் பணியிட மாற்றம் செய்துள்ளோம்.
சுண்ணாம்பாறு படகு குழாமில் சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நிற்பதைத் தவிர்க்க டோக்கன் முறை அமல்படுத்தியுள்ளோம். மேலும், மாத ஊதியமின்றி சேவை நோக்குடன் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவி செய்ய ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளோம்.
புதுவையில் கேசினோ கொண்டு வர இருப்பதும், இதுகுறித்து அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதும் அமைச்சர் பேசிய பின்னர்தான் தெரியும். என்னிடம் இதுகுறித்து எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை. கலாசாரச் சீரழிவு ஏற்படுத்தாத சுற்றுலாத் திட்டங்கள் மட்டுமே தேவை என்பது எனது எண்ணம் என்றார் பாலன்.