மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் புதுவைக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டுவர முடியும் என்று என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் தலைவர் என்.ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாஜக, அதிமுக கூட்டணியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியை ஆதரித்து அரியாங்குப்பம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேசியதாவது:
2011-இல் பெற்ற வெற்றியைப்போல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று வேட்பாளராக உள்ள இளைஞரை மக்களவைக்கு அனுப்ப வேண்டும். படித்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். அனுபவம் இல்லை என்று கூறுகின்றனர். அரசியலுக்கு வந்துவிட்டால் அனுபவம் தானாக வந்துவிடும். மக்களவை பணியை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். மக்களவை உறுப்பினர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும்.
புதுவை காங்கிரஸ் அரசு, கடந்த ஆட்சிக் காலத்தில் செய்த திட்டங்களையும் தொடரவில்லை, புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. பொலிவுறு நகர திட்டம் கொண்டு வந்ததாகக் கூறுகின்றனர்.
புதுச்சேரியில் அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும், போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் சேதராப்பட்டில் 750 ஏக்கர் நிலத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தை கொண்டுவர கோப்பு அனுப்பினோம். இவர்கள் புதுச்சேரிக்கு கேட்டு பெற்றுள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ் காலத்தில் அனுப்பிய கோப்பு, இவர்கள் காலத்தில் வந்ததால் தாங்கள் கொண்டுவந்த திட்டமாக முதல்வர் நாராயணசாமி கூறுகிறார்.
மத்திய ஆட்சியில் நல்ல உறவோடு இருந்தால் திட்டங்கள் புதுவைக்கு கிடைக்கும்.
எத்தனையோ ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வலியுறுத்தி வருகின்றோம். அப்பொதெல்லாம் இல்லாத அக்கறை இப்போது ஏன்? இவர்கள் எப்போதும் வாங்க மாட்டார்கள். ஆளுநரை எதிர்த்து, போராட்டம் நடத்தும் அரசியல் நாடகம் நடத்துகின்றனர். இதை முறியடித்து வெற்றி பெற ஜக்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ரங்கசாமி.
தேர்தல் பிரசாரத்தில் பாஜக மாநிலச் செயலர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ., அதிமுக மாநிலச் செயலர் புருஷோத்தமன், அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன், முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. ஆ.பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.