என்.ஆர். காங். - காங்கிரஸ் கட்சியினர் மோதல்: 2 பேர் மீது வழக்கு

புதுவை மாநிலம், மடுகரையில் காங்கிரஸ் - என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில், மைக் உடைக்கப்பட்டது.

புதுவை மாநிலம், மடுகரையில் காங்கிரஸ் - என்.ஆர். காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில், மைக் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வடிவேல் ஏற்பாட்டின் பேரில், மடுகரை இந்திரா நகர் பகுதியில் வியாழக்கிழமை ஒரு மினி வேனில், புதுவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.  
மடுகரை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன பிரகாஷ் என்பவர் பிரசாரத்தில் ஈடுபட்டாராம். அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை அவர் விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்களான மணிகண்டன், செந்தில்குமார் ஆகிய இருவரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தகராறில் ஈடுபட்டனராம். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.
அப்போது, மணிகண்டனும், செந்தில்குமாரும் மோகன பிரகாஷ் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடுங்கி உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வடிவேல் அளித்த புகாரின் பேரில், மடுகரை போலீஸார் மணிகண்டன், செந்தில்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com