முருங்கப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை வழிமறித்து செல்லிடப்பேசி, நகை, பைக்கைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகர், பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (39). அபிஷேகப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர், சனிக்கிழமை இரவு வேல்ராம்பட்டைச் சேர்ந்த தனது நண்பர் ஜெயச்சந்திரனுடன் மோட்டார் பைக்கில் அரியாங்குப்பத்தில் இருந்து புதுச்சேரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் முருங்கப்பாக்கம் பாலத்தைத் தாண்டிய போது, ராமமூர்த்திக்கு செல்லிடப்பேசியில் அழைப்பு வந்ததை அடுத்து, அங்கு பைக்கை நிறுத்திவிட்டு பேசினாராம். அப்போது, 2 மோட்டார் பைக்குகளில் அங்கு வந்த 4 பேர் ராமமூர்த்தி, ஜெயச்சந்திரனை மிரட்டி, அவர்களிடமிருந்த செல்லிடப்பேசிகள், ஒன்றே கால் பவுன் தங்க நகை, பைக் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.