குடிமைப் பணிகள் தேர்வில் புதுச்சேரி மின்துறை ஊழியர் தேர்ச்சி பெற்றார்.
இந்திய குடிமைப் பணிகள் தேர்வு கடந்த 2018-இல் நடைபெற்றது. இதற்கான நேர்முகத் தேர்வு கடந்த மாதம் முடிந்த நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில், மொத்தம் 729 ரேங்க் வரை தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு எழுதிய புதுச்சேரி முதலியார்பேட்டை பிஎஸ்பி வங்கி காலனியைச் சேர்ந்த ஸ்ரீராம் (25), 453-ஆவது ரேங்க் எடுத்துள்ளார். இவர் தனது விண்ணப்பத்தில் முதல் தேர்வாக ஐஎஃப்எஸ் (வெளிநாடு தூதுவர் பணி) பணிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். இவருக்கு பெற்றோர் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இவரது தந்தை ராகவன், புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தாய் சுமதி அரசுப் பள்ளி ஆசிரியை. ஸ்ரீராம் புதுச்சேரி மின்துறை அலுவலக புதைவடம் மற்றும் பயிற்சி மைய கோட்டத்தில் மேல்நிலை எழுத்தராக பணியாற்றி வருகிறார்.