புதுச்சேரியிலிருந்து தமிழகத்துக்கு காரில் கடத்த முயன்ற 64 மதுப் புட்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலையொட்டி போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி 100 அடி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே முதலியார்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் வீரபத்திரசாமி தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் காரில் இருந்தவரிடம் விசாரித்தபோது, அவர், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் (48) என்பதும், புதுச்சேரியிலிருந்து 64 மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார், ஸ்ரீனிவாசனை கைது செய்து, மதுப் புட்டிகளை கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர்.