புதுவை மாநிலம், ஆலங்குப்பத்தில் லாரி ஓட்டுநர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், இடையஞ்சாவடியைச் சேர்ந்தவர் கணபதி (33). லாரி ஓட்டுநர். இவர் அடிக்கடி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சாராயக் கடைக்குச் சென்று மது அருந்துவது வழக்கமாம்.
கடந்த 13-ஆம் தேதி மாலை கணபதி அந்தக் கடையில் மது அருந்திவிட்டு, அருகில் உள்ள கடையில் முருக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்காமல், அந்தக் கடையை அடித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தட்டிக்கேட்ட கடை உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்திக்கும் (50), கணபதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் கணபதி, மூர்த்தியையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன் (63), கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பு பகுதியைச் சேர்ந்த குமார் (எ) சிவக்குமார் (52) ஆகியோருடன் சேர்ந்து, கணபதியை இரும்புக் கம்பியால் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த கணபதி உயிரிழந்தார்.
இதுகுறித்து தன்வந்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து மூர்த்தியை அண்மையில் கைது செய்தனர். இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய நாராயணன், சிவகுமார் இருவரும் இரும்பை கிராமத்தில் பதுங்கியுள்ளதை அறிந்த போலீஸார், அவர்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.