கல்லூரிகளுக்கு இடையிலான வாக்காளர் விழிப்புணர்வு கலைப் போட்டியில் தாகூர் அரசு கலைக் கல்லூரி சிறப்பிடம் பெற்றது.
புதுச்சேரி மக்களவைத் தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் ஏப்.18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட தேர்தல் துறை சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவு, வாக்களிக்க பணம் பெறாமல் இருப்பது வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்குச் செய்துள்ள அடிப்படைத் தேவைகள், 5 ஆண்டுகள் நம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்வு செய்யும் பணி ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக தேர்தல் விழிப்புணர்வு கலைப் போட்டி கடற்கரை சாலை காந்தித் திடலில் அண்மையில் நடைபெற்றது.
போட்டியில் புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி கலை, அறிவியல் கல்லூரி, தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 12 கல்லூரிகள் பங்கேற்றன.
இதில் தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல் பரிசைப் பெற்றது. இரண்டாம் பரிசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரிக்கு கிடைத்தது.
இதனிடையே, முதல் பரிசு பெற்ற தாகூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள், முதல்வர் இளங்கோவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் கண்ணன், கோவலன் ஆகியோர் உடனிருந்தனர்.