புதுச்சேரி லாஸ்பேட்டையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் இரும்பு கடை அருகே ஒரு கட்சியினர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்தார்.
அங்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பதும், அவர் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக தனது பையில் ரூ. ஒரு லட்சத்தை வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், தட்டாஞ்சாவடி தொகுதி தேர்தல் அதிகாரி ஸ்மித்தாவிடம் ஒப்படைத்தனர்.
மேலும், இதுகுறித்து தன்வந்திரி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.