புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 8 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி லாசுப்பேட்டை ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (26). இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு லாசுப்பேட்டை குறிஞ்சி நகரில் ஆறுமுகம் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 4 பேர் சரமாரியாக வெட்டினர். இதில் ஆறுமுகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் அபூர்வ குப்தா, வடக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளர் (பொ) சுபம் கோஷ், லாசுப்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி உள்ளிட்ட போலீஸார் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறுமுகம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்ததும், மும்பைக்குச் சென்று தங்கி இருந்த அவர், புதுச்சேரிக்கு வந்த தகவல் தெரிந்து எதிரிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் ரகு, வெள்ளை (எ) சுரேஷ், அக்ஷய், விக்கி, விக்னேஷ், சந்தோஷ்குமார், அருண், சத்தியமூர்த்தி ஆகிய 8 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.