இளைஞர் கொலை வழக்கில் 8 பேர் கைது

லாசுப்பேட்டையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

லாசுப்பேட்டையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (26). இவர், கடந்த 2 -ஆம் தேதி இரவு லாசுப்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் லாசுப்பேட்டை மடுவுபேட்டு பகுதியில் உள்ள மதுபானக் கடையில் கட்டடத் தொழிலாளி அருண் கொலைக்கு பழிக்குப் பழியாக ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆறுமுகம் சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நிலையில், பாதுகாப்பு கருதி, வெளியூரில் தங்கியிருந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பியுள்ளார். அவர் புதுச்சேரிக்கு வந்ததைத் தெரிந்து கொண்ட அருணின் நண்பர்கள், ஆறுமுகத்தை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, பாக்கமுடையான்பட்டைச் சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (24), அக்ஷய் (23), வெள்ளை (எ) சுரேஷ் (24), சக்தி (எ) சத்தியமூர்த்தி (22), ஜீவானந்தபுரத்தைச் சேர்ந்த ரகு (30), அருண் (24), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த விக்கி (எ) ராஜ் விக்னேஷ் (22), தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (23) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 4 பைக்குகள், 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், ரகு உள்ளிட்ட 8 பேரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com