புதுவையில் அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்திருப்பது பாஜகவுக்கு பின்னடைவைத் தரும் என புதுவை திமுக தெரிவித்துள்ளது.
புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்தியில் ஆளும் பாஜக அரசு சிறிய மாநிலமான புதுவையின் ஜனநாயகத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. புதுவை மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ரசை துச்சமாக நினைத்து செயல்பட்டு வருகிறது.
ஏற்கெனவே, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் சிபாரிசும், அனுமதியும் இல்லாமல், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்ட, டெபாசிட் இழந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக, புற வாசல் வழியாக சட்டப்பேரவைக்குள் அனுப்பியது. இதை எதிர்த்து, சட்டப் போராட்டம் நடத்தினோம். உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்கவும் ஓட்டுரிமையை நியமனம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கியது.
சென்னை உயர்நீதிமன்றம் புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு இல்லை என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் அதை எதிர்த்து மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்தது. இதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்தை பாஜக அரசு பேணிக் காப்பதாக தெரியவில்லை. இது ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால்.
மத்தியில் ஆளும் பாஜகவின் இந்தச் செயலை புதுவை மட்டுமன்றி, நாட்டு மக்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இது நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தும். பாஜகவுக்கு பின்னடைவைத் தரும் எனத் தெரிவித்துள்ளார் சிவா எம்.எல்.ஏ.