ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கியதாக தீயணைப்புப் படை வீரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிபவர் உதயகுமார் (36). திங்கள்கிழமை இரவு இவரும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவரும் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையின் ஓரத்தில் 3 கார்கள் நின்றதால், கார் ஓட்டுநரிடம் காவலர் உதயகுமார் விசாரித்தார். ஒரு கும்பல் கார் மீது கல்லை வீசி விட்டு, ஓடிவிட்டதாக கார் ஓட்டுநர் கூறினார். இதையடுத்து, காவலர் உதயகுமார், அந்தப் பகுதியின் ஓரமாக நின்றுகொண்டிருந்த ஒரு கும்பலிடம் சென்று விசாரித்தாராம். அப்போது, அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவரும், சின்னவீராம்பட்டினத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரருமான தினேஷ் ஆத்திரமடைந்து, உதயகுமாரை தாக்கிவிட்டு, தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீஸார் தினேஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.