புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து அவர் மத்திய அரசின் 15-ஆவது நிதிக்குழுத் தலைவர் சிங்குக்கு திங்கள்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுவை யூனியன் பிரதேசத்தில் 116 நகர வார்டுகளை உள்ளடக்கிய 5 நகராட்சிகளும், 108 கிராம பஞ்சாயத்துகளையும், 812 கிராம வார்டுகளையும் உள்ளடக்கிய 10 கொம்யூன் பஞ்சாயத்துகளும் உள்ளன. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கக் கூடிய பிரதிநிதிகளாக 1,144 பேர் செயல்பட வேண்டும்.
இந்த அமைப்புகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய தேர்தல்கள் முறையாக நடத்தப்படாமல் இருந்த போதும், இந்த அமைப்புகள் தங்களிடம் உள்ள பணியாளர்களைக்கொண்டு குறைந்த பணிகளையே ஆற்றி வருகின்றன.
மாநில அரசே நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் இந்த உள்ளாட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நிதிக் குழுவிலோ அல்லது உள்துறை அமைச்சகம் நியமித்துள்ள நிதிக் குழுவிலோ புதுவை சேர்க்கப்படாமல், தனக்கு வரவேண்டிய நியாயமான நிதியை இழந்து நிற்கிறது. மத்திய பஞ்சாயத்து அமைச்சகமும், நகர்ப்புற அமைச்சகமும் பல்வேறு காரணங்களுக்காக புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்க முடியவில்லை.
ஆகவே, மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி உதவியைப் பரிந்துரைக்கும் 15-ஆவது நிதிக் குழு, யூனியன் பிரதேசத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அந்த நிதியை பரிந்துரைக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளும், யூனியன் பிரதேசத்தில் உள்ள அமைப்புகளும் ஒரே பணிகளை ஆற்றக்கூடிய ஒரே விதமான அமைப்புகள்தான்.
இந்திய அரசியலமைப்புச்சட்டம் 73, 74 ஆகியவை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது போல புதுவை யூனியன் பிரதேசத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களுக்கும் புதுவை யூனியன் பிரதேசத்துக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.
மற்ற மாநிலங்களில் உள்ளது போல புதுவையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டப்பேரவை இயங்குகிறது. ஆகவே, இந்த பிரச்னையின்உண்மையான தன்மையை உணர்ந்து புதுவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் சிறப்பு நிதியை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.