மருத்துவப் படிப்பில் புதுவை மாநில இடஒதுக்கீட்டை நிரப்பிய பிறகே, என்ஆர்ஐ கலந்தாய்வை நடத்த வேண்டும் என புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் வை. பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநில மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில்
40 இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 242-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களுக்கும் வருகிற 17 ஆம் தேதிக்குள் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என சென்டாக் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மாணவர் சேர்க்கைக்கான ஆணையை சென்டாக் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முடியாததால், மாணவர் சேர்க்கை தடைபட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது மருத்துவக் கல்லூரிகளில் உள்ள என்ஆர்ஐ இடங்களை நேரடி கலந்தாய்வு மூலம் நடத்த சென்டாக் நிர்வாகம் முயற்சிப்பது புதுச்சேரியில் உள்ள அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்போது அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுள்ள 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பிற மாநிலத்தில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளது என புகார்கள் தெரிவிக்கப்பட்டும் சென்டாக் அமைப்பும், அரசும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலியான ஆவணங்கள், போலி ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் பெற்ற மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்திட வேண்டும். நீக்கப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். சென்டாக் இணையதளம் குறிப்பிட்ட காலங்களில் முடங்கி செயல்படாமல் இருந்ததற்கு துணை போன நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட தவறுகளை சரிசெய்து, அரசு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் புதுவை மாநில ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பி கலந்தாய்வை முடித்த பிறகே, என்ஆர்ஐ மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.