வில்லியனூர் அருகே தனியார் நிறுவனத்திடம் ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக, தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகே உளவாய்க்கால் கிராமத்தில் தனியார் பேக்கேஜிங் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2014-16 ஆம் ஆண்டில் வில்லியனூர் செல்வகணபதி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் குமார் என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது, வருமான வரித் துறைக்கு நிறுவனம் செலுத்த வேண்டிய ரூ. 14 லட்சம் விற்பனை வரிக்கான பணத்தை குமார் செலுத்தாமல், கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த நிறுவனம், மேலாளர் குமாரிடம் பணத்தை திருப்பித்தர வலியுறுத்தியுள்ளது. இதன் பேரில் குமாரும், அவரது மனைவி ஹேமலதாவும் பணத்தை திருப்பித் தர ஒப்புக்கொண்டனராம். ஆனால், பணத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் காவல் நிலையத்தில் அளித்த புகாரை போலீஸார் ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் ராஜபாண்டியன், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், போலீஸார் வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது.
இதன் பேரில் வில்லியனூர் போலீஸார், தனியார் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய விற்பனை வரி ரூ. 14 லட்சத்தை மோசடி செய்ததாக, அப்போதைய நிறுவன மேலாளர் குமார், அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.