புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை சின்னபொய்கையில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடங்களை புதன்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
கோவிந்தசாலை சின்னபொய்கை அங்காள பரமேஸ்வரி கோயிலில் 15-ஆவது ஆண்டு ஆடி பௌர்ணமி, அம்மனுக்கு பாலாபிஷேகம், திருவிளக்கு பூஜை மற்றும் திருக்கல்யாண விழா கடந்த 12-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, தினமும் காலை, மாலை வேளைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாக புதன்கிழமை காலை 10 மணிக்கு அரசமரத்தடி விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால் குடங்களை ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பிப்டிக் தலைவரும், உருளையன்பேட்டை எம்.எல்.ஏ.வுமான சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்கள், பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கோவிந்த சாலை பகுதி இளைஞர்கள் செய்திருந்தனர்.