பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், புதுச்சேரியில் வரும் 18-ஆம் தேதி சிறப்புக் கவியரங்கம், ஓவியப் போட்டி நடைபெறுகின்றன.
இதுகுறித்து பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கோ.பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், சுதந்திர தினத்தையொட்டி, சிறப்புக் கவியரங்கம், ஓவியப் போட்டி ஆகியவை புதுச்சேரி வள்ளலார் சாலை வேல். சொக்கநாதன் திருமண நிலையத்தில் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.
"நாடு முன்னேற நான்' என்ற தலைப்பில் கவிஞர்கள், கவிதை வாசிக்க உள்ளனர். "புதுச்சேரி ஆலமரங்கள்' குறித்தும், விடுதலை இயக்கத் தலைவர்கள், நிகழ்வுகள் பற்றியும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஓவியம் வரைய உள்ளனர். தேசிய மரமான ஆலமரத்தைப் பற்றிய விழிப்புணர்வு, பராமரிப்பு, பயன்கள் குறித்து மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தவும், மரங்களைக் காக்கவும் இந்த ஓவியப் போட்டி நடைபெறுகிறது.
போட்டிகளை சட்டப் பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தொடக்கிவைக்கிறார். வேளாண் துறை விஞ்ஞானி வெங்கடபதி, லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். கண் மருத்துவர் வனஜா, பேராசிரியர் நல்லசாமி ஆகியோர் பாராட்டிப் பேசுகின்றனர். இதில், திரளான தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.