புதுச்சேரியில் 4 கார்களைத் திருடியதாக விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் கடந்த சில வாரங்களாக கார்கள் தொடர்ச்சியாக திருடுபோயின. இது தொடர்பாக, பெரியக்கடை போலீஸார் வழக்குப் பதிந்து, கார் திருடியவர்களை தேடி வந்தனர்.
இதனிடையே, கடலூர் மாவட்டம், பண்ருட்டி போலீஸார் கடந்த ஜூலை 20-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கார், பைக்குகளை தொடர்ச்சியாகத் திருடி வந்த விழுப்புரம் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த லாரி உதவியாளரான மணிகண்டனை (24) கைது செய்தனர். இது தொடர்பாக புதச்சேரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், பெரியக்கடை போலீஸார், அண்ணா சாலை சந்திப்பில் குயவர்பாளையத்தைச் சேர்ந்த வரதனின் காரை கடந்த ஜூலை 27-ஆம் தேதி திருடிய வழக்கு தொடர்பாக, கடலூர் சிறையில் இருந்த மணிகண்டனை செவ்வாய்க்கிழமை புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். இதில், மேலும் 3 கார்களை அவர் திருடியிருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், கார் ஓட்டுவதில் அதிக விருப்பம் கொண்ட மணிகண்டன், கார்களை அவ்வப்போது திருடி, அந்த காரில் டீசல் தீரும் வரை ஓட்டிவிட்டு, நின்றவுடன் அங்கேயே காரை நிறுத்திவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும், இதனாலேயே அவர் போலீஸில் பிடிபடாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடமிருந்து ஒரு காரை பறிமுதல் செய்த போலீஸார், மணிகண்டனை புதன்கிழமை கைது செய்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப் பட்டு மத்திய சிறையில்
அடைத்தனர்.