மங்கலம் அருகே பூட்டியிருந்த வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வில்லியனூரை அடுத்த மங்கலம் அருகே கோர்க்காடு தனத்துமேடு சாலை பெருமாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த வரதன் மனைவி லட்சுமி (எ) விஜயா (55). வரதன் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவர்களது மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரு மகன்களும் வேலைக்காக வெளியூர் சென்றுள்ளனர்.
இதனால் கோர்க்காட்டில் தனியாக வசித்து வந்த லட்சுமி, தனக்குச் சொந்தமான திருவாண்டார்கோயில், வில்லியனூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் அவ்வப்போது சென்று தங்கிவிட்டு வருவது வழக்கம்.
அதன்படி, சில நாள்களுக்கு முன்பு வில்லியனூரில் உள்ள மகள் வீட்டுக்குச் சென்ற லட்சுமி, அங்கிருந்து புறப்பட்டு திருவாண்டார்கோயில் வீட்டை பார்த்துவிட்டு செவ்வாய்க்கிழமை மீண்டும் கோர்க்காடு திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.55 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ அளவிலான வெள்ளி பூஜைப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.