லாசுப்பேட்டையில் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி லாசுப்பேட்டை சங்கதரதாஸ் சுவாமிகள் நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். நகரப் பகுதியில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (34). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகும் நிலையில், குழந்தை இல்லாததால், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சத்யா வீட்டில் செவ்வாய்க்கிழமை திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சத்யாவை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து லாசுப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து
விசாரித்து வருகின்றனர். மேலும், இறந்த சத்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், வருவாய்த் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.