புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஆக.16) தேரோட்டம் நடைபெறுகிறது. தேரை புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைக்கிறார்.
புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமி வீதியுலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெள்ளிக்கிழமை (ஆக.16) காலை நடைபெறுகிறது. தேரை ஆளுநர் கிரண் பேடி வடம் பிடித்து இழுத்து தொடக்கிவைக்கிறார். இதில், முதல்வர் வே.நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரும், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, 17-ஆம் தேதி இரவு தெப்பல் உத்ஸவம் நடைபெறுகிறது.
வரும் 23-ஆம் தேதி இரவு முத்துப்பல்லக்குடன் விழா நிறைவு பெறுகிறது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெறும் தேரோட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், நிகழாண்டு புதுச்சேரி நகராட்சி சார்பில் செங்கழுநீரம்மன் கோயில் பகுதியில் 40 கழிப்பறைகள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்த் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களைக் கண்காணிக்க காவல் துறை சார்பில் 14 நிரந்தர சிசிடிவி கேமராக்களும், கோயில் நிர்வாகம் சார்பில் 10 இடங்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.