மூதாட்டியிடம் நூதன முறையில் தங்க நகை திருட்டு
By DIN | Published On : 19th August 2019 09:58 AM | Last Updated : 19th August 2019 09:58 AM | அ+அ அ- |

காலாப்பட்டில் மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடி தேரோடும் வீதியைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (72). தனது மகன் வீட்டில் வசித்து வரும் இவர், சனிக்கிழமை மாலை வீட்டின் எதிரே தனியாக அமர்ந்திருந்தாராம். அப்போது, அங்கு மோட்டார் சைக்களில் வந்த மர்ம நபர், பவுனம்மாளுக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, வீட்டின் அருகே நிற்க வைத்து தனது செல்லிடப்பேசியில் போட்டோ எடுத்தாராம். அப்போது, தங்கச் சங்கிலி அணிந்திருந்தால் கடன் கிடைக்காது என்றும், அதைத் தன்னிடம் கொடுத்துவிட்டு, புகைப்படம் எடுத்த பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறினாராம். இதையடுத்து, பவுனம்மாள் அந்த நபரிடம் தன்னுடைய 2 பவுன் தங்கச் சங்கிலியைக் கொடுத்தாராம். அப்போது, திடீரென அந்த மர்ம நபர், தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.