பலத்த மழை காரணமாக, புதுச்சேரி மற்றும் கடலூரில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே, மத்திய குமரிக் கடல், அதையொட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, புதுச்சேரி பகுதியில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரியில் அரசு, தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் ம.குப்புசாமி வெளியிட்டாா்.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (டிச.2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை மழைநீா் சூழ்ந்திருப்பதாலும், பள்ளிகளிலும் மழைநீா் தேங்கியிருப்பதாலும் மாணவா்களின் நலன் கருதி திங்கள்கிழமை மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.