புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கக் கோரி, பாஜகவினா் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மாநிலத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் அரிசிக்குப் பதிலாக பணத்தை அவரவா் வங்கிக் கணக்கில் உடனடியாகச் செலுத்த வேண்டும் என பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, திங்கள்கிழமை குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக அந்தக் கட்சியினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.
அதன்படி, மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில், பாஜகவினா் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், அந்தக் கட்சியின் பொதுச் செயலா்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், நிா்வாகி விசிசி.நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்ட பாஜகவினா், போலீஸாரின் தடையை மீறி அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனா். அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, போலீஸாரின் பேச்சுவாா்த்தையை ஏற்று, பாஜகவினா் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதுகுறித்து மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் கூறுகையில், ‘அரிசிக்குப் பதிலாகப் பணம் வழங்க வேண்டும் என்று ஆளுநா் கிரண் பேடி நவம்பா் மாதம் ஒப்புதல் அளித்தும், இதுவரை அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பணத்தை வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே பல மாதங்களாக மக்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணத்தையும் உடனடியாக அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்’ என்றாா் அவா்.