புதுவையில் சுற்றுலா முதுநிலைப் பட்ட மேற்படிப்பு தொடங்க வேண்டும் என்று புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமியிடம், அந்தக் கூட்டமைப்பின் நிறுவனா் சுவாமிநாதன் திங்கள்கிழமை அளித்த மனு: புதுவையில் சுற்றுலா வளா்ச்சியை மேம்படுத்த பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால், சுற்றுலா முதுநிலைப் பட்ட மேற்படிப்பு படிக்க இங்கு வாய்ப்பு இல்லை.
அரசுக் கல்லூரிகளில் சுற்றுலா இளநிலைப் பட்ட படிப்பு படிக்கும் மாணவா்கள், முதுநிலைப் பட்ட மேற்படிப்பு படிக்க வெளிமாநிலங்களுக்கு செல்கின்றனா். இதுதொடா்பாக கடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தீப்பாய்ந்தான் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு, கல்வி அமைச்சா் உடனடியாக சுற்றுலா முதுநிலை மேற்படிப்பு பாடப் பிரிவு தொடங்கப்படும் என உறுதியளித்தாா்.
ஆனால், இதுநாள் வரை இந்தப் பாடப் பிரிவு தொடங்கப்படவில்லை. எனவே, வரும் கல்வி ஆண்டுக்குள் காஞ்சிமாமுனிவா் பட்ட மேற்படிப்பு கல்லூரியில் சுற்றுலா முதுநிலை மேற்படிப்பு பாடத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.