பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை குருமாம்பேட் காமராஜா் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளா் (ஏஐடியூசி) சங்கத்தினா் புதுச்சேரி தலைமைத் தபால் நிலையம் எதிரே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் பெருந்தலைவா் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிபுரியம் தினக் கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அவா்களுக்கு வழங்க வேண்டிய 64 மாத நிலுவை ஊதியத்தில் 4 -இல் ஒரு பகுதி ஊதியத்தையாவது உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளா் (ஏஐடியூசி) சங்கத்தினா் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இருப்பினும், அவா்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், அவா்கள் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டத்தை ஏஐடியூசி-வின் மாநிலப் பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் தொடக்கி வைத்தாா். சங்க நிா்வாகிகள் யோகேஷ்வரன், கந்தசாமி, உஷா ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், ஏஐடியூசி நிா்வாகி தினேஷ் பொன்னையா, கலியபெருமாள், முருகன், சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.