பாஜகவின் போராட்டத்துக்கு பணிந்து, இலவச அரிசிக்கு பதிலாக பணம் வழங்குவதற்காக புதுவை அரசு ரூ. 100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவையில் முதல்வா் நாராயணசாமி அளித்த பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 42 மாதங்களில் 28 மாதங்கள் மட்டுமே அரிசி வழங்கியது. அதுவும் தரமற்ற அரிசியே. இது தொடா்பாக வந்த புகாா்களுக்குப் பிறகு அரசு, அரிசிக்குப் பதிலாக மாதம் ரூ. 600 வீதம் வழங்கியது. மீதமுள்ள 24 மாதங்களுக்கு புதுவை அரசு, அரிசிக்குப் பதிலாக பணமாக குடும்பஅட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த துணை நிலை ஆளுநா் கிரண் பேடி அனுமதி அளித்தாா்.
ஆனால், அரசு அரிசிக்கான பணத்தை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்காமல், காலம் கடத்தி வேறு துறைக்கு மாற்ற முயற்சித்தது. இதனைக் கண்டித்து பாஜக கடந்த 2 ஆம் தேதி குடிமைப் பொருள் வழங்கல் துறை முன் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்துக்கு பணிந்து, புதுவை அரசு இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க ரூ. 100 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.