வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் போராட்டம்
By DIN | Published On : 06th December 2019 09:21 AM | Last Updated : 06th December 2019 09:21 AM | அ+அ அ- |

சட்டப்பேரவை அருகே நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள்.
காமராஜா் வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்கள் வியாழக்கிழமை 4-ஆவது நாளாக வயிற்றில் ஈரத்துணி கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி குருமாம்பேட் காமராஜா் வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) பணிபுரியும் ஊழியா்களுக்கு 6 ஆண்டுகளாக வழங்காமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும், 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கேவிகே ஏஐடியூசி தொழிலாளா்கள் சங்கத்தினா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 3 நாள்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த அவா்கள், புதன்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், 4-ஆவது நாளான வியாழக்கிழமை சட்டப்பேரவை அருகே வயிற்றில் ஈரத்துணிகளைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சங்கத் தலைவா் யோகேஷ்வரன் தலைமை வகித்தாா். இதில் கேவிகே ஊழியா்கள் பலா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.