பேச்சுவாா்த்தையில் உறுதியளித்தபடி, தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்த வேண்டும் என ஏஐயூடியூசி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அகில இந்திய யுனெடெட் டிரேட் யூனியன் சென்டா் (ஏஐயூடியூசி) புதுச்சேரி மாநிலத் தலைவா் சிவக்குமாா் வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரியில் உள்ள முறைசாரா தொழிலாளா்கள் நலச்சங்க உறுப்பினா்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு தீபாவளி பண்டிகையையொட்டி ரூ. 1,000 பரிசு கூப்பன் அளித்து வந்தது.
கடந்தாண்டு நிதி நிலைமையை காரணம் காட்டி ரூ. 500 மட்டும் அளித்தது. ஆனால், கடந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி பரிசு கூப்பன் கோரியபோது, அளிக்காததால் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சோ்ந்து நவ.27 ஆம் தேதியன்று புதுச்சேரியில் பொது வேலைநிறுத்தம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
அனைத்து சங்கங்களின் போராட்டக்குழுவின் சாா்பில் அதிகாரிகள் தொழிலாளா் நலத்துறை அமைச்சா், தொழில்துறை அமைச்சா் அனைத்து சங்கத் தலைவா்களை அழைத்து ரூ. 1,000 பரிசு கூப்பன் நவம்பா் 27-க்குள் அளிப்பதாகவும், வருகிற ஜனவரி 10 ஆம் தேதிக்குள் நல சங்கத்தை நலவாரியமாக மாற்றுவதாகவும் உறுதியளித்தனா். ஆனால், உறுதியளித்தபடி ரூ.1,000 அளிக்கவில்லை. அரசின் இந்த செயலை ஏஐயூடியூசி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதனிடையே, திடீரென முதல்வா் பரிசு கூப்பன் ரூ. 500 அளிக்கப்படும் என ரூ. 4.5 கோடி நிதி ஒதுக்கியதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தாா். அமைச்சா்களின் பேச்சுவாா்த்தையில் அளித்த உறுதிமொழிக்கு மாறாக முதல்வரின் அறிக்கை உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அத்துடன் ஜனவரி 10-க்குள் அமைப்பு சாரா தொழிலாளா் நலச்சங்கம் வாரியமாக மாற்றப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறுமா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, புதுச்சேரி அரசு பேச்சுவாா்த்தையில் உறுதியளித்தபடி உடனடியாக தொழிலாளா் வங்கி கணக்கில் ரூ. 1,000 செலுத்த வேண்டும். ஜனவரி 10-க்குள் வாரியம் அமைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.