புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியரின் காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி கோரிமேடு, சிவாஜி நகர் பூத்துறை சாலை அண்னை தெரசா வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இஎஸ்ஐ மருத்துவமனையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கண்ணம்மாள் கோரிமேடு மார்பு நோய் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுடைய காரை சாரத்தில் வசிக்கும் கண்ணம்மாளின் சகோதரர் பாபுவும் அவ்வப்போது எடுத்து ஓட்டுவது வழக்கம். இந்த நிலையில், பாலாஜியும், அவரது மனைவி கண்ணம்மாளும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வெளியூர் சென்றனர்.
இதையடுத்து, வழக்கம் போல காரை பாபுவின் சகோதரி வீட்டில் சனிக்கிழமை நிறுத்திவிட்டுச் சென்றார். பின்னர், இரவு திரும்பி வந்து பார்த்த போது, காரை காணவில்லையாம். மர்ம நபர்கள் காரை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பாபு தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், தன்வந்திரி நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.