புதுவை மாநில சட்டப் பணிகள் ஆணையம், பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய, "பெண்களுக்குரிய சட்ட உரிமை மற்றும் சேவைகள்' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பூ. பூங்காவனம் முன்னிலை வகித்தார். மாநில சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான வ.சோபனாதேவி, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்ட உரிமைகள் குறித்தும், அவர்களுக்குரிய சிறப்பு சேவைகள், அதனை அணுகும் முறைகள், சட்ட விழிப்புணர்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
சட்டப்பணிகள் ஆணையத்தின் மூத்த வழக்குரைஞர்கள் ஷாகிதா பர்வீன்குமார், சட்டப் பணிகள் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினார்.
முன்னதாக, பாரதிதாசன் மனையியல் துறை பேராசிரியையும், கல்லூரி சட்ட சேவை மையத்தின் தலைவருமான அலமேலு மங்கை அனைவரையும் வரவேற்றார். இந்த விழிப்புணர்வு முகாமில் கல்லூரியின் அனைத்துத் துறை மாணவ பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரியின் சட்ட சேவை மையம் செய்திருந்தது.