கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மண்சட்டி அணிந்தபடி பைக்கில் ஊர்வலமாகச் சென்றனர்.
புதுவையில் கட்டாய தலைக்கவச சட்டம் கடந்த 11-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனை நடத்தி, தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
இதற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்தும், அரசியல்வாதிகள் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், கட்டாய தலைக்கவச சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாசிக், கேவிகே, பாண்டெக்ஸ், பாண்பெப், பாப்ஸ்கோ, மார்க்கெட் கமிட்டி உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை மண்சட்டியை தலையில் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாகச் சென்றனர்.
இதில், 5 முதல் 50 மாதம் சம்பளம் வழங்காததால், எங்களால் வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக உள்ளது. குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த இயலவில்லை.
இந்தச் சூழலில் தலைக்கவசம் வாங்க முடியாததை ஆளுநருக்கு தெரிவிக்கும் வகையில் தலையில் மண்சட்டியை அணிந்து செல்வதாக ஊர்வலத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
பாக்குமுடையான்பேட்டை சந்திப்பில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று, மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நிறைவுற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆங்காங்கே அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.