ஆசிரியர்கள் பணிக்கு வராததைக் கண்டித்து, கூட்டுறவு கல்லூரி வாயிலை மூடி மாணவிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கூட்டுறவு கல்லூரியில் மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். இக்கல்லூரி பேராசிரியர்கள் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரிக்கு ஆசிரியர்கள் வருவதில்லையாம்.
இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயிலை மூடி
தர்னாவில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸார், மாணவிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கூட்டுறவுத்துறை பதிவாளர் ஸ்மிதியிடம் பேச்சுவார்த்தை நடத்த மாணவிகளை அழைத்துச் சென்றனர்.
கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என பதிவாளர் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.