புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் கட்சி குறித்து 10 நாள்களில் முடிவு செய்யப்படும் என்று மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மீனவர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் வகையில் மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்துகேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 30 தொகுதிகளிலும் 2 நாள்கள் கருத்துகேட்க முடிவு செய்துள்ளோம்.
புதுவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவோம். இத்தொகுதியில் பாஜக போட்டியிடுமா அல்லது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்பது குறித்து முடிவு எடுப்பது தேசியத் தலைமையின் உரிமை. புதுவை மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது குறித்து இன்னும் 10 நாள்களில் முடிவு செய்யப்படும் என்றார் சாமிநாதன்.
பேட்டியின்போது பாஜக துணைத் தலைவர் ஆர்.செல்வம், பொதுச்செயலர் தங்க.விக்ரமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.