பேராசிரியரை நீக்கக் கோரி, தாகூர் அரசு கலை -அறிவியல் மாணவர்கள் 2- ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலை -அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. ஏற்கெனவே அந்தப் பேராசிரியர் மீது மற்றொரு கல்லூரி மாணவிகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், மீண்டும் அவர் மீது புகார் எழுந்ததால், பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் முறையிட்டனர். ஆனால், மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று, புகாரில் சிக்கிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதைக் கண்டித்தும், அந்தப் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தாகூர் அரசு கலை - அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை லாசுப்பேட்டையில் உள்ள உயர் தொழில்நுட்பத் துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.