புதுவை மத்திய தேர்தல் அதிகாரி வி.கந்தவேலுவை மாற்றக்கோரி, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு, அக்கட்சியின் புதுவை பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் அனுப்பிய கடிதம் விவரம்:
மக்களவைத் தேர்தலையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 2019 ஜனவரி மாதம் ஒரு கடிதத்தை அனைத்து மாநில - யூனியன் பிரதேச தலைமைச் செயலர்களுக்கு அனுப்பி இருக்கிறது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கு மேல் தேர்தல் தலைமை அதிகாரியாகவும், மற்ற துணைத் தேர்தல் அதிகாரியாகவும் பணியாற்ற வாய்ப்பில்லை என்றும் அவ்வாறு இருப்பவர்களை விடுவிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ஆனால், தலைமை தேர்தல் ஆணையத்தின் கடிதம் வந்து ஒரு மாத காலமாகியும், வி.கந்தவேலு, புதுவை தலைமை தேர்தல் அதிகாரியாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்து வருகிறார்.
புதுவை மாநிலத்தில் நேர்மையான வெளிப்படைத் தன்மையுள்ள ஆரோக்கியமான தேர்தல் நடைபெற கந்தவேலுவை உடனடியாக அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கவும், அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவும் புதுவை தலைமைச் செயலருக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராஜாங்கம்.