பாரதிதாசன் அறக்கட்டளை விழா வருகிற 13- ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், மாதந்தோறும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழ் மாத விழா புதுச்சேரி பெருமாள் கோயில் தெரு, பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 13- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவில், "தமிழர் திருநாளும் பாவேந்தரும்' என்ற தலைப்பில் அறக்கட்டளைத் தலைவர் கவிஞர் கோ. பாரதி தலைமையேற்று உரை நிகழ்த்துகிறார்.விழாவில் மன்னர்மன்னன், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து, முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க. லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதைத் தொடர்ந்து, "தமிழ் எங்கள் உயிருக்கு வான்' என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.