புதுவை அரசின் நில அளவைத் துறையில் ஆளுநர் கிரண் பேடி வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுவை ஆளுநர் கிரண் பேடி அரசு அலுவலகங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். வியாழக்கிழமை பத்திரப் பதிவுத் துறையில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த வகையில், வெள்ளிக்கிழமை நில அளவை பதிவேடுகள் துறையில் அவர் திடீர் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பத்திரப் பதிவு, நில அளவைப் பதிவேடுகள் துறைகளில் லஞ்சம் ஒழிக்கப்படவும், பொதுமக்களுக்கு
உதவும் வகையிலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பத்திரப் பதிவாளர், நில அளவைப் பதிவேடுகள் துறை இயக்குநர் ஆகியோரிடம் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த இரு அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். தேசிய தகவல் மையம் (நிக்) இரு துறைகளுக்கும் தேவையான மென்பொருள்களைத் தயார் செய்து, இரண்டையும் இணைக்கும் பாலமாக உள்ளது.
இந்தத் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.