கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்தச் சங்கத்தின் கெளரவத் தலைவர் வடிவேல் தலைமை வகித்தார்.
இதில், லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் தலைமையில் நடத்தப்பட்ட முத்தரப்புக் கூட்டத்தில் பொங்கலுக்கு முன்பாக, 2016 - 17 ஆம் ஆண்டு
நிலுவைத் தொகை ரூ. 9.61 கோடியை வழங்குவதாக எடுக்கப்பட்ட முடிவை அமல்படுத்தாதைக் கண்டித்தும், ஆலையில் மூவர் குழு நிர்வாகத்தின் போது, நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலைக்கான விவசாயிகள்
பேரவைத் தேர்தலை நடத்தி,
நிர்வாகக் குழுவை அமைக்க வேண்டும், அரியூர் இஐடி பாரி சர்க்கரை ஆலையைத் தொடங்குவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், புதுச்சேரி அரசு அறிவிக்கின்ற விலையை தர மறுக்கும் இஐடி பாரி சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, போராட்டத்துக்கு ராமமூர்த்தி, முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் நிலவழகன் உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கம் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
உண்ணாவிரதத்தில் திரளான கரும்பு விவசாயிகள் பங்கேற்று, நிலுவைத் தொகை வழங்க
வலியுறுத்தி முழக்கங்களை
எழுப்பினர்.