கால்நடை மருத்துவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. ஒரு லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காராமணிக்குப்பம் மாரியம்மன் நகர் மூவேந்தர் வீதியைச் சேர்ந்தவர் மனோகரன் (62). இவர், புதுச்சேரி கால்நடை துறையில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில், ரெயின்போ நகரில் கால்நடைகளுக்கான கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். மனோகரன் தட்டாஞ்சாவடியில் உள்ள தேசிய வங்கி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ரூ. ஒரு லட்சம் பணத்தை எடுத்து பையில் வைத்தார். அந்தப் பையை தனது காரில் வைத்துகொண்டு கிளினிக்குக்கு வந்தார். காரை கிளினிக் அருகே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.
பின்னர், வீட்டுக்குச் செல்ல காரை எடுக்க வந்த போது, காரின் பக்கவாட்டுக் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ள பார்த்த போது, பணப் பையைக் காணவில்லையாம். இதுகுறித்து மனோகரன் அளித்த புகாரின் பேரில், பெரியக்கடை காவல் உதவி ஆய்வாளர்கள் வெற்றிவேல், முருகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.