புதுவையில் அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு சட்டத்தின்படி இயங்கி வரும் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கும் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று புதுவை அரசு கல்லூரி ஆசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 7 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், ஒரு சட்டக் கல்லூரியும் பல்கலைக்கழக மானியக் குழு மேற்பார்வையில் புதுச்சேரி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளும், மற்ற கல்லூரிகள் கூட்டுறவுச் சட்டத்தின் கீழ் இயங்குகிறது.
மத்திய அரசு பரிந்துரைத்த ஏழாவது ஊதியக் குழுவை புதுவை அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பே அரசுத் துறை ஊழியர்களுக்கு அமல்படுத்தியது. ஆனால் கல்லூரி ஆசிரியர்களுக்கு கடந்த 2.11.2017-இல் பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரையின் பேரில், அறிவித்தது. அதனடிப்படையில் கோப்புகள் தயாரிக்கப்பட்டன. முதலில் அரசு கல்லூரிகளுக்கும், பின்னர் மற்ற கல்லூரிகளுக்கும் ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக சனிக்கிழமை நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுத்து, அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம் என்றார் பாலமுருகன்.