கடலோர காவல்படை சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள், காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றன.
கடலோர காவல் வார விழாவையொட்டி, நடத்தப்பட்ட இப்போட்டியில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 76 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
8 முதல் 10 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி மாணவி ஸ்ரீ ஹரிணி முதலிடமும், எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். அஸ்வின் இரண்டாமிடமும், ரீஜினஸ் பர்பெக்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர் சி. ராகேஷ் மூன்றாமிடமும் பெற்றனர்.
11, 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில், தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். கபிலன் முதலிடமும், எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவர் சி. சுபாஷ் இரண்டாமிடமும், ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி மாணவி பி. மர்லியா மூன்றாமிடமும் பெற்றனர்.